

சென்னை,
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் விடிய விடிய காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுக்க பெய்த கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்க பாதைகள் வெள்ளத்தில் முழ்கின. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுள்ளது.
இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு கருதி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 36,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பூர், வியாசர்பாடி, மேற்கு மாம்பலம், தி.நகர், கே.கே.நகர், மற்றும் வேளச்சேரியின் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் சுற்றியுள்ள மழை நீரின் அளவு குறைந்த பிறகு மின்விநியோகம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.