

திருப்பூர்,
திருப்பூரை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் ஜீப்பை ஏற்றி விசைத்தறி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரூராட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூரை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி கருகம்பாளையம் லட்சுமிகார்டன் தெருவை சேர்ந்த பழனிசாமி (வயது 57), விசைத்தறி தொழிலாளி. இவர் குடியிருந்த பகுதியில் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் வந்து, சாலை அமைய உள்ள இடம், தங்களுக்கு சொந்தமானது என்று கூறி ஆட்சேபனை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தொழிலாளி பழனிசாமி கடந்த 4-7-2025 அன்று சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை(60) சந்தித்தார்.
அப்போது தார்சாலை அமைய உள்ள ஆட்சேபனைக்குரிய இடத்தை பேரூராட்சி நிர்வாகம் விலைக்கு வாங்கிவிட்டு, அதன்பிறகு தார் சாலை அமைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த பிரச்சினையில், நீங்கள் தலையிடக்கூடாது என தொழிலாளி பழனிசாமியை, பேரூராட்சி தலைவர் மிரட்டினார்.
இந்த நிலையில் கடந்த 10-9-2025 அன்று தொழிலாளி பழனிசாமி, கருகம்பாளையம் அரசு பள்ளி அருகே ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அந்த வழியாக ஜீப்பை ஓட்டி வந்த பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி, ஸ்கூட்டரில் சென்ற பழனிசாமியின் மீது மோதினார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து தொழிலாளி பழனிசாமியின் மகன் சுகுமார் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. கொலை குற்றத்துக்காக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.