சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
Published on

ஐப்பசி மாத முதல் பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் நல்லது நடக்கும் என்ற ஐதீகத்தால், சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு நேற்று மாலை பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பிரதோஷத்தையொட்டி பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர். ஐப்பசி மாத 2-வது பிரதோஷம் அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந்தேதி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com