ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை தமிழகம் வருகை

ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்
சென்னை,
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வருகிறார். நாளை மதியம் சென்னைக்கு வரும் அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்கிறார்.
நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அன்றையதினம் இரவு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி தங்குகிறார். நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திரவுபதி முர்மு திருச்சி செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செல்கிறார்.
மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு, திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். திரவுபதி முர்மு பங்கேற்கும் நந்தம்பாக்கம் நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






