வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்


வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
x

ஜனாதிபதி வருகையையொட்டி வேலூரில் 2 அடுக்கு பாதுகாப்புடன் 1,700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேலூர்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் இன்று காலை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வருகை தந்தார். அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மேயர் சுஜாதா ஆகியோர் வரவேற்றனர்.

கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 1,700 கிலோ வெள்ளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் விநாயகரையும், 70 கிலோ தங்கத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகாலட்சுமியையும் தரிசனம் செய்தார். சீனிவாசா பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்த பின்னர் சொர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தில் மரக்கன்று நட்டார். சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.

தங்க கோவிலை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார். ஜனாதிபதி வருகையையொட்டி வேலூரில் டிடோன்கள் பறக்க தடை செய்யப்பட்டது. வேலூர், அணைக்கட்டு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கோவில் வளாகம், ஸ்ரீபுரம் பகுதிகளிலும் 2 அடுக்கு பாதுகாப்புடன் 1,700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தரிசனம் முடிந்ததும் ஜனாதிபதி மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார்.

1 More update

Next Story