2 சிறுவர்கள், ஒரு சிறுமிக்கு பாலியல் கொடுமை: பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறை

சிவகங்கை பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவர், கோவிலுக்கு வந்த 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை மிரட்டி தாக்கி, பாலியல் கொடுமை செய்துள்ளார்.
2 சிறுவர்கள், ஒரு சிறுமிக்கு பாலியல் கொடுமை: பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறை
Published on

சிவகங்கையை அடுத்துள்ள சோழபுரம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 70), அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்தார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு கோவிலுக்கு வந்த 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை மிரட்டி தாக்கி, பாலியல் கொடுமை செய்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இதுகுறித்து தன்னுடன் படிக்கும் மற்றொரு சிறுமி மூலம் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். அந்த ஆசிரியை, குழந்தைகள் நல குழுவினரிடம் புகார் செய்தார். குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை செய்தனர். அப்போது பெரியசாமி, சிறுவர்கள் மற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.

அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி கோகுல முருகன் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கினார். அதில் அவர், 3 குழந்தைகளுக்கும் காயம் ஏற்படுத்தியது, மிரட்டியது, பாலியல் கொடுமை செய்தது, பூசாரியாக இருந்து கொண்டு இந்த தகாத செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனியாக தண்டனையும், அபராதமும் விதித்தார்.

மேலும் ஒவ்வொரு தண்டனையையும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தீர்ப்பு கூறினார். அதன்படி கோவில் பூசாரி பெரியசாமிக்கு மொத்தம் 178 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் தமிழக அரசு இழப்பீடாக வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com