

திருச்சி,
சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் கடந்த மாதம் திருவள்ளூரிலும், 2-வதாக புதுச்சேரி மற்றும் மதுரையிலும் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றி னார். இந்த நிலையில் 3-வது முறையாக பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் இன்று மாலை நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே.தலைவர் பச்சமுத்து மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்துக்கு பஞ்சப்பூரில் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் அமர 76 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மேலும் இதில் 7 லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய மண்டலத்தை சேர்ந்த 12 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கொச்சியில் இருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் மோடி திருச்சிக்கு வந்தார். தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை தந்தார். இதையடுத்து பஞ்சப்பூரில் அரசு திட்டங்களை தொடங்கிவைத்தார். தமிழகத்திற்கு புதிய 5 ரெயில் சேவைகளையும் மோடி திறந்து வைத்தார்.