

கன்னியாகுமரி
ரூ 40 ஆயிரம் கோடி குமரி மாவட்ட மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று குமரி மாவட்டம் வந்தார். இதற்கான விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்று உள்ளனர்.
முன்னதாக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகை தந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் வரவேற்றனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தம்பிதுரை எம்பி. ஆகியோரும் வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திரமோடி வருகையையொட்டி குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி வருகையை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பா.ஜனதா சார்பில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன.
விழா நடைபெறும் இடத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. மேடையில் பெரிய எல்.இ.டி. திரையும் வைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் மோடி வருகையால் குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.