

காஞ்சிபுரம்,
திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. திமுக நிர்வாகிகள் பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் கிராம சபை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், ஸ்ரீபெரம்புத்தூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இதில் பேசிய அவர், அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மம் இன்னும் நீடித்து வருவதாக அவர் கூறினார்.
மேலும் இன்று டிசம்பர் 23 ஆம் தேதி நாடு முழுவதும் விவசாயிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் முதுகெலுமான விவசாயத்தை பிரதமர் காப்பாற்ற வேண்டும் என்றும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற எந்த வித தயக்கமும் இன்றி பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.