

தனியார் நிறுவன ஊழியர்
திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அடுத்த எல்.வி.புரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 39). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 8-ந் தேதி இரவு வழக்கம் போல பணி முடித்து வீடு திரும்பியபோது மழை பெய்து உள்ளது. வீட்டின் முன்பக்க தரையில் தெருநாய் படுத்து இருந்ததால் அதனை விரட்டி உள்ளார்.
சாவு
அந்த நாய் திரும்பி கடிக்க பாய்ந்ததால் சேகர் ஓட முயன்றபோது தவறி விழுந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சேகர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.