

சென்னை,
’பி.டி.அரசகுமார் மற்றும் அவருடன் சேர்ந்த சிலர் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் தனியார் பள்ளிகளில் நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ ஒப்புதல், ஆர்டிஇ உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் சுமார் ரூ.100 கோடி வசூலித்து மோசடி செய்ததாக கூறி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் டி.சி.இளங்கோவன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட திமுக பிரமுகரான பி.டி.அரசகுமார் கடந்த ஜூன் 27-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. விசாரணையில், 2024 முதல் பள்ளி நிர்வாகிகளைச் சந்தித்து பணம் வசூலித்தது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய 61 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை பாதிக்கப்பட்ட 120 பள்ளி நிர்வாகிகள் உள்பட 190 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில், மதுரை, சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (எ) ராஜா (39), திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சுரேஷ் (49) ஆகியோர் அரசகுமாருக்கு உடந்தையாக இருந்து, பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்தது தெரிய வந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.