தனியார் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்-1' ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது

‘விக்ரம்-1' ராக்கெட் இந்தியாவிலேயே தனியார் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட்டாகும்.
தனியார் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்-1' ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது
Published on

சென்னை,

ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனமான 'ஸ்கைரூட்' ஏரோஸ்பேஸ், விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இது இந்தியாவிலேயே தனியார் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட்டாகும். விண்வெளியில் பூமியின் சுற்றுப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்துவதற்கான இந்த ராக்கெட்டை வருகிற 12-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ந்தேதிக்குள்ளாக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்வெளிக்கு ஏவுவதற்கான சோதனைகள் நடக்க இருக்கிறது.

இதுகுறித்து ஸ்கைரூட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன்குமார் சந்தனா கூறும்போது, “இந்தியாவின் விண்வெளி தொழில், தனியார் நிறுவனங்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. விக்ரம்-1 ராக்கெட் 350 கிலோகிராம் வரையிலான சிறிய செயற்கைகோள்களை புவியின் தாழ் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுவதுமாக கார்பன் கலப்பு கட்டமைப்பை கொண்டு உருவாக்கப்பட்டு, ஸ்கைரூட்டால் உருவாக்கப்பட்ட '3டி' அச்சிடப்பட்ட என்ஜின்கள் உள்ளிட்ட திட மற்றும் திரவ உந்துவிசை அமைப்புகளால் இயக்கப்படும் விக்ரம், ஒரு வெற்றிகரமான பயணமாக அமையும். ராக்கெட் பணிகளை ஒருங்கிணைத்தல், சோதித்தல் பணிகள் நிறைவடைதல், வானிலை, பாதுகாப்பு, ஏவுதள அனுமதி ஆகியவற்றைப் பொறுத்தே இதன் ஏவுதல் தேதி அறிவிக்கப்படும்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com