தூத்துக்குடியில் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்

தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் பக்தர்கள் 21 தீச்சட்டிகள் ஏந்தியும், பறவைக்காவடி எடுத்தும், காளி வேடமணிந்தும், மாவிளக்கு ஏந்திய பெண்களும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. வேம்படி இசக்கியம்மன் கோயில் முன், ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் 21 தீச்சட்டிகள் ஏந்திய பக்தர்கள், பறவைக்காவடி எடுத்த பக்தர்கள், காளி வேடமணிந்த பக்தர்கள், மாவிளக்கு ஏந்திய பெண்கள் சென்றனர்.
சுவாமி, அம்பாளின் பிரமாண்ட திருவுருவ அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. ஊர்வலம் பாளையங்கோட்டை சாலை, வி.வி.டி. சந்திப்பு, காய்கறி மார்க்கெட் சந்திப்பு, பழைய பஸ் நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயில் முன்பு நிறைவடைந்தது. ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பாக காளி வேடமணிந்திருந்த பக்தர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.






