

கடம்பூர் அருகே உள்ள குன்றி பிரிவு பகுதியில் கடம்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது, 'காரில் தின்பண்டங்களுடன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடத்தி சென்றதை,' கண்டுபிடித்தனர். இதையடுத்து காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர்கள் பங்களாப்புதூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த முகமது யாசின் (வயது 38), கோபி நஞ்சகவுண்டம்பாளையம் புதுக்காடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (45) என்பதும், அவர்கள் புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி சென்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 1 கிலோ 800 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.