ராமநாதபுரம் மாவட்டத்தில் 9-ந்தேதி முதல் தடை உத்தரவு அமல்

வருகிற 9-ந் தேதி முதல் 2 மாத காலத்திற்கு 163 (1) தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30-ந்தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு வருகிற 9-ந் தேதி முதல் 2 மாத காலத்திற்கு 163 (1) தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர, வருகிற 9-ந்தேதி முதல் வரும் 15-ந் தேதி வரையும், அக்டோபர் 25-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்படுகிறது. அதேபோல, நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 1 கிலோ மீட்டருக்குள் மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதி பெற்று ஜோதி எடுத்து வரவேண்டும்.
மேலும், அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதி பெற்றுதான் வரவேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.






