

பூமிபூஜை
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தாசகவுண்டன் ஏரியில் (பாப்பாரப்பட்டி ஏரி) கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.79 லட்சம் மதிப்பில், ஏரியை புனரமைக்கும் பணி மற்றும் ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பில் இதர வளர்ச்சி திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் காந்தி, சக்கரபாணி ஆகியோர் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மதியழகன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் அளவில் அனைத்து பகுதிகளுக்கும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் இந்த தாசகவுண்டன் ஏரியை ரூ.79 லட்சம் மதிப்பில் புனரமைத்து, கரைகளை பலப்படுத்த, ஏரியின் பக்கவாட்டில் கால்வாய் அமைத்தல், கிரில் கைப்பிடி அமைத்தல், மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
கட்டுமான பணிகள்
இதே போல் நேதாஜி சாலையில் உள்ள மயானத்தில் எரியூட்டும் அறை, காரியம் செய்யும் அறை, அலுவலக அறை, எல்பிஜி மற்றும் ஜெனரேட்டர் அறை, கழிப்பறை, சுற்றுச்சுவர் போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன எரிவாயு கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து பணிகளும் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் காந்திகூறினார்.
இதில் உதவி கலெக்டர் சதீஸ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், தாசில்தார் நீலமேகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தலைவர் நவாப், நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, கவுன்சிலர்கள் பாலாஜி, எழிலரசி சரவணன், விஜயா, மதன்ராஜ், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.