சொத்து தகராறு: காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி; வழக்கறிஞர் கைது

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரில் சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும், அதுவரை உடலை அடக்கம் செய்யவிடமாட்டேன் என்று கூறி வழக்கறிஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டார்.
சொத்து தகராறு: காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி; வழக்கறிஞர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே அங்கமங்கலம் கோட்டார்விளையைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 91). இவருக்கு அம்பிகா, உமாபதி, இந்துமதி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் பெரியசாமியின் மனைவி காலமான நிலையில், அவர் ராதாபுரத்தில் உள்ள தனது 3-வது மகள் இந்துமதி வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உடல்நலக்குறைவால் பெரியசாமி காலமானார்.

பெரியசாமியின் உடல் அடக்கத்திற்காக கடந்த வியாழக்கிழமை அங்கமங்கலத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது 2-வது மகளான உமாபதியின் கணவர், வழக்கறிஞர் டேவிட் கணேசன்(45), சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை அடக்கம் செய்யவிடமாட்டேன் என்றும் கூறி தகராறில் ஈடுபட்டார். ஊர் மக்கள் சமாதானம் செய்தும் அவர் உடன்படாததால், உறவினர்கள் உடலை ஒப்படைக்க மறுத்தனர்.

இதுகுறித்து புகார் அளிக்க நேற்று குரும்பூர் காவல் நிலையத்திற்கு சென்ற டேவிட்கணேசன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யைத் தன் மீதும், தனது மகன் அஸ்வந்த்(17) மீதும் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் உடனடியாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி 2 பேரையும் மீட்டனர்.

தற்கொலைக்கு முயன்ற வழக்கறிஞர் டேவிட்கணேசன் மற்றும் அவரது மகன் அஸ்வந்த் ஆகிய 2 பேர் மீதும் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். சொத்து தகராறுக்காகத் தந்தையின் உடலை வைத்து மருமகனே காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com