சொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் - சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் வரும் 30-ந்தேதிக்குள் சொத்து மற்றும் தொழில்வரியை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் - சென்னை மாநகராட்சி உத்தரவு
Published on

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இதனால், நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை முறைப்படி தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி தான் வசூலிக்கும் சொத்துவரி மூலம் மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், தூய்மை பணிகள், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், வரும் 30-ந்தேதிக்குள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்களும், வணிகர்களும், சொத்துவரி மற்றும் தொழில்வரியை செலுத்திட வேண்டுமென சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி 28-ந்தேதி (மிலாடி நபி) மற்றும் 30-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய அரசு விடுமுறை நாட்களில் ரிப்பன் கட்டிடத்திலுள்ள வருவாய்த்துறை தலைமையிடம், மண்டலங்களில் உள்ள வருவாய்த்துறையில் சொத்துவரி மற்றும் தொழில்வரி வசூல் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. சொத்துவரி மற்றும் தொழில்வரியினை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அக்டோபர் 1-ந்தேதி முதல் அபராத வட்டித் தொகை விதிக்கப்படும். எனவே, சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் 30-ந்தேதிக்குள் சொத்து மற்றும் தொழில்வரியை இணையதளத்திலும், தலைமையகத்திலும் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com