

சென்னை,
'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;
”மதுவுக்கும், போதைப்பொருள்களுக்கும் எதிராக, கடந்த மே 11 முதல் நேற்று ஆகஸ்ட் 12 வரை, 94 நாட்கள் தொடர்ந்து மௌனப் போராட்டத்தை மேற்கொண்ட, சேலத்தைச் சேர்ந்த
மூத்த காந்தியவாதியும், கல்வியாளருமாகிய, டாக்டர் சி. பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மதுவிலக்கிற்காக, போராட்டம், பிரசாரம், சத்தியாகிரகம், பாதயாத்திரை என பல்வேறு அகிம்சை வழிகளில் குரல் கொடுத்து வருகிறார். சேலத்திலிருந்து சபர்மதி, சேலத்திலிருந்து மதுரை என பல நீண்ட பாதயாத்திரைகளை மேற்கொண்டு, மக்களிடையே மதுவிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
திருக்குறளின் 1330 குறள்களைப் போலவே, 1330 நாட்கள் தினமும் 12 மணி நேரம் காந்தி சிலை முன்பு மதுவுக்கும் போதைப்பொருள்களுக்கும் எதிராக பதாகை ஏந்தி நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். தமது 95 வயதிலும், மது உள்ளிட்ட போதைப்பொருள்களுக்கு எதிரான அவரது மன உறுதி, இளைய தலைமுறைக்கு முன்னுதாரணம்.
ஒரு மனிதர் தனது வாழ்நாளையே சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணித்திருப்பது மிகப்பெரிய தியாகம். டாக்டர் பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் மதுவிலக்கு போராட்டத்திற்கு தலைவணங்கி, அவரது ஐம்பது ஆண்டுகளைக் கடந்த மேலான சமூகப் பணிகளுக்கு, எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.