சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்: ‘பிளாஸ்டிக்’ தடையை நீக்க கோரி வழக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

‘பிளாஸ்டிக்’ தடையை நீக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும், சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்: ‘பிளாஸ்டிக்’ தடையை நீக்க கோரி வழக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் வீரேந்திர பயானி, சங்கத்தின் சுற்றுச்சூழல் குழு தலைவர் பி.சுவாமிநாதன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பிளாஸ்டிக் மீதான தடை அறிவிப்பால் தமிழகத்தில் 8 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்படும். இந்த தொழிலை நம்பி உள்ள 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

இந்த துறையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தற்போது வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் பெற்றுள்ள ரூ.4 ஆயிரம் கோடி கடன், வாராக் கடனாக மாறும்.

ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு, ஆண்டு ஒன்றுக்கு வர வேண்டிய ரூ.1,800 கோடி இழப்பாக அமையும். பிளாஸ்டிக் தொழிலாளர்கள் பெற்ற தனி நபர் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன் போன்றவற்றை கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதன்மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக அமைந்துவிடும்.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, மற்ற பிளாஸ்டிக் பொருட்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடும். எனவே தமிழக அரசு இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்ப பெற வேண்டும். பிளாஸ்டிக் தடையால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு அரசு நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். மேலும் பிளாஸ்டிக் மீதான தடையை நீக்கக்கோரி கோர்ட்டை நாடவும் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com