

சென்னை,
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
வடகிழக்குப் பருவமழையையொட்டி முன் கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கிறேன். அமைச்சர்களும் இதுபோன்ற நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மக்களின் இன்னல்களைப் போக்கிட தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.