உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம்

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம்
Published on

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள 104 மருத்துவ சேவை மையம் சார்பில் உக்ரைன் நாட்டில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது நிலையை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கல்வி தொடர...

உக்ரைனில் இருந்து இதுவரை மருத்துவம் படித்த 1,456 மாணவர்கள் தமிழகத்துக்கு திரும்பி உள்ளனர். அவர்களுக்கு 104 மருத்துவ சேவை வாயிலாக 2 நாட்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் அவர்களின் தேவை குறித்து கேட்டறியப்படுகிறது.

இந்த மாணவர்களின் கல்வி தொடர மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதார சட்ட முன்வடிவு

மாணவர்களிடம் பேசுகையில், உக்ரைனைபோல், போலந்து உள்ளிட்ட சிறிய நாடுகளிலும் ஒரே மாதிரியான மருத்துவ பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கு மருத்துவ கல்வியை முடிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

அனைத்து தரப்பினருக்கும் தேவையான மருத்துவம் கிடைக்கும் வகையில், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது, அவர்களின் உரிமை காப்பது, அரசின் கடமையை செய்வது ஆகியவற்றை முன்னிறுத்தி சுகாதார உரிமைக்கான சட்ட முன்வடிவு விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த சட்ட முன்வடிவு குறித்து, பொருளாதார வல்லுனர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று சட்டம் நிறைவேற்றப்படும்.

இவை நாட்டிலேயே முன்மாதிரி சட்டமாக இருக்கும். தமிழகத்தில் இதுவரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 59 லட்சத்து 98 ஆயிரத்து 325 பேர் பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வதந்திகளை நம்ப வேண்டாம்

இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், கொரோனா தடுப்பூசி போட்டப்பின், 18 வயது பெண்ணுக்கு கண் பார்வை பாதிப்பு, மற்றொரு சிறுமிக்கு கால் ஊனம் போன்ற தகவல்கள் வந்தப்பின், அவை உடனடியாக மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அளவில் 175 கோடியும், தமிழகத்தில் 10 கோடிக்கு மேல் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. ஒரு சிலவற்றை வைத்து தடுப்பூசி மீது வதந்தி பரப்பக்கூடாது. அந்த 2 பேரும் வேறு சில மருத்துவ காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை, மத்திய, மாநில மருத்துவ குழுக்கள் ஆய்வு நடத்துகிறது. அதன்பின்தான் உண்மை தெரிய வரும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com