

தஞ்சாவூர்,
செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உதவி கலெக்டர் சுபாஷ் கார்த்திக் பேசினார்.
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதை உதவி கலெக்டர் சுபாஷ் கார்த்திக் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், பொதுமக்கள் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில், இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 3 நாட்கள் நடக்கின்றன.
இதில் தஞ்சை முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி, அஞ்சலகங்கள் மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். இதேபோல், முத்ரா கடன் உள்பட பல்வேறு வங்கிச் சேவைகள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் எடுத்து கூறினார். சென்னை மண்டல கள விளம்பர அலுவலர் சக்திவேல், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் முழுமையாகத் தெரிந்து கொண்டு பயன் அடைய வேண்டும் என்றார்.
உதவி கலெக்டர் சுபாஷ் கார்த்திக் பேசும்போது, அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு திட்டங்கள் குறித்த முழுமையான விழிப்புணர்வை பொதுமக்கள் பெற்றுக்கொண்டு, அதன் பயன்களைப் பெற வேண்டும். இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களில் உண்மையான தகவல்களை சரிபார்த்து பயன்படுத்த வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார். கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டு, மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து பயன் அடைந்தனர்.