மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை, ஆரணி உள்பட பல்வேறு ஊர்களில் இந்துக்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
Published on

மகாளய அமாவா சையை முன்னிட்டு திருவண்ணாமலை, ஆரணி உள்பட பல்வேறு ஊர்களில் இந்துக்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மகாளய அமாவாசை

இந்துக்கள் மறைந்த தங்களுடைய முன்னோர்களுக்கு அமாவாசை அன்று விரதம் இருந்து வீட்டில் பூஜை செய்து வழிபடுவார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை (புரட்டாசி அமாவாச) ஆகிய தினங்களில் நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள்.

அவ்வாறு செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பதும், தடைப்பட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நீங்கி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான மகாளய அமாவாசை தினமான நேற்று திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளக்கரை, ஈசான்ய குளக்கரை, அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்த கரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நீர் நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதற்காக நேற்று அதிகாலை முதலே அங்கு பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் சிவாச்சாரியார்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆரணி

ஆரணி புதுக்காமூர் பகுதியில், குழந்தை வரும் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகாமையில் கமண்டல நாக நதி ஆற்றங்கரையில் மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் திதி, தர்ப்பணம் கொடுக்க வந்ததால் கோவில் அருகே நீண்ட வரிசை காணப்பட்டது.

புரோகிதர்கள அவர்களை தரையில் அமர வைத்து திதிகொடுக்க செய்தனர்.

இதேபோல் வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதையொட்டி சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வேத மந்திரங்களை முழங்கி தர்ப்பணம் செய்து வைத்தனர். இதில் வந்தவாசியை சுற்றியுள்ள சென்னாவரம், பிருதூர், வங்காரம், அம்மையப்பட்டு, மும்முனி, வங்காரம் போன்ற பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சென்றனர்.

பாளூர்

இதேபோல் போளூரில் உள்ள கைலாசநாதர் கோவில், பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், பெரியகரம் கிராமத்தில் உள்ள குளக்கரை உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com