டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தர்ணா

காத்திருப்பு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தர்ணா
Published on

சீர்காழி:

காத்திருப்பு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.

டாஸ்மாக் கடை

சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. காத்திருப்பில் இருந்து நாங்கூர், திருவெண்காடு, மங்கைமடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரவும், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நகர் பகுதிக்கு வருவதற்கும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த டாஸ்மாக் கடை எதிரே மது அருந்தி விட்டு மதுபரியர்கள், அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லவே பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அச்சுகின்றனர்.

தர்ணா போராட்டம்

இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த நாங்கூர் கிராம மக்கள் சீர்காழி தாசில்தார் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையை உடனே அகற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com