

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகத்சிங் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு நீண்ட நாட்களாக பட்டா வழங்க வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் குடியிருக்கும் பகுதி அரசு புறம் நிலம் என்பதால் குடியிருக்கும் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பகத்சிங் நகர் பகுதிக்கு வருவாய்த்துறையினர் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் சென்றனர்.
அப்போது வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பதற்கு அந்த பகுதயை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டிக்காமல் மின்வாரிய ஊழியர்கள், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் திரும்பி சென்றனர். இதனால் சிங்கப்பெருமாள் கோவில் பகத்சிங் நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.