கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னையை அடுத்த கொரட்டூரில் 590 ஏக்கரில் ஏரி உள்ளது. சுற்றுப்புற தன்னார்வலர்கள், கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் என்ற பெயரில் இந்த ஏரியை அவ்வப்போது தூய்மைப்படுத்தி, பராமரித்து, ஏரியை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசுக்கு கொண்டு செல்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் வழியாக பக்கிங்காம் கால்வாயில் சென்று கலக்கிறது. மழை காலங்களில் இந்த கழிவுநீர் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் செல்லும்போது மண்டல அதிகாரிகள், கழிவுநீர் கால்வாயில் உள்ள மதகு வழியாக கொரட்டூர் ஏரிக்குள் கழிவுநீரை திறந்து விடுவதாக இந்த ஏரி பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இதுபோல் ஏரிக்குள் கழிவுநீரை கலக்கக்கூடாது என்றும் மண்டல அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கழிவுநீர் கால்வாய் மதகு வழியாக கொரட்டூர் ஏரிக்குள் கழிவுநீரை திறந்து விடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனை கண்டித்து நேற்று காலை கொரட்டூர் ஒண்டிவீரன் கோவில் அருகில் உள்ள கழிவுநீர் மதகு அருகே பெண்கள் உள்பட பொதுமக்கள், தன்னார்வலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை அனுமதிக்கும் மாநகராட்சி அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொரட்டூர் போலீசார், இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com