

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அருள் நகர் பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றன.
அதேபோல நந்திவரம் மலைமேடு பகுதியில் சாலையோரம் அதிக அளவில் பன்றிகள் சுற்றி திரிகிறது. அவை சாலையில் அங்கும், இங்கும் ஓடி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றன.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதோடு, பொதுமக்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அருள் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள நகர் பகுதிகளில் தினந்தோறும் பன்றிகள் இறந்து கிடக்கின்றன. இறந்து கிடக்கும் பன்றிகளை அவ்வப்போது நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு நகர் பகுதியில் தற்போது பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. பன்றிகளால் பலவிதமான நோய் தொற்றுகளும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. எனவே கண்ட இடங்களில் பன்றிகள் சுற்றி திரிவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.