இறந்த கோவில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி

குஜிலியம்பாறை அருகே இறந்த கோவில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறந்த கோவில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி
Published on

குஜிலியம்பாறை ஒன்றியம் காட்டமநாயக்கன்பட்டி, கூட்டக்காரன்பட்டி, விராலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோவில் காளைகளை வளர்த்து வருகின்றனர். கோவில் திருவிழாக்களில் மட்டுமே இந்த காளைகள் பங்கேற்பதால் இவை சாமி மாடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு காட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கவேல் என்பவர் வளர்த்து வந்த கோவில் காளை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தது. இதற்கு வயது 23 ஆகும். அதையடுத்து காளையின் உடலுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு ஊர் மந்தையில் வைக்கப்பட்டது. கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து இறந்த காளைக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் தேவராட்டம் ஆடி சிறுவர்கள் காளைக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் காளையின் உடல் சாமி மாடுகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் புதைக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com