கீழடி அறிக்கையை உடனே வெளியிடுக: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை திருத்தம் செய்யுமாறு ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கீழடி

அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கை தமிழர் நாகரீகம் வரலாற்றில் மிகவும் தொன்மையானது என்பதை அறிவியல் பூர்வமாக, சான்றுகளோடு உறுதிப்படுத்தியுள்ளது. சிவகங்கைக்கு அருகே உள்ள கீழடியை ஆய்வு செய்து பல்வேறு அறிவியல்பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் அந்த அறிக்கை 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தமிழர் நாகரிகம்

மிக நீண்ட உழைப்பின் பலனாக 982 பக்கம் கொண்டதாக அந்த அறிக்கை வெளியானது. வேதகால நாகரிகத்திற்கு முன்பே தமிழர் நாகரிகம் தோன்றியது என்பதை அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை உறுதி செய்கிறது.

மத்திய அரசு நெருக்கடி

இந்த அறிக்கை வெளி வந்தால் ஒன்றிய பாஜக அரசின் அறிவியலுக்கு புறம்பான, பிற்போக்கான புராண இதிகாச கருத்தியல் தவறானது என உறுதி செய்து விடும். எனவே, அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை திருத்தம் செய்யுமாறு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

வெளியிட வேண்டும்

உண்மை வரலாற்றை மறைக்க முயற்சிக்காமல், அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என மத்திய பாஜக அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com