புதுக்கோட்டை: இளம்பெண் தற்கொலை - வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தாயார் போலீசில் புகார்

கோப்புப்படம்
வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை அண்டக்குளம் அருகே உள்ள செம்பட்டி முகப்பு ஊரை சேர்ந்தவர் பாரதிராஜா (25 வயது), கூலி தொழிலாளி. இவரது மனைவி கீர்த்திகா (22 வயது). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கவின் (1½ வயது) என்ற மகன் உள்ளார். கீர்த்திகாவுக்கு திருமணத்தின்போது வரதட்சணையாக 4 சவரன் தங்கம், மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், பாரதிராஜா அவரது தாயார் ராக்கம்மாள் ஆகியோர் கூடுதலாக வரதட்சணை வாங்கி வருமாறு கீர்த்திகாவை திருச்சி பொன்னகர் பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கீர்த்திகாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் மாலை கீர்த்திகா தனது தாயார் வெள்ளையம்மாளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கீர்த்திகா தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடையாளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், வரதட்சணை கேட்டு தனது மகளை அவரது கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கீரனூர் போலீசில் வெள்ளையம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






