கூழ் ஊற்ற தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும்

அம்மன் கோவில்களில் கூழ் ஊற்ற இலவச தானியங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
கூழ் ஊற்ற தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும்
Published on

வேடசந்தூரில் பஸ் நிலையம் மற்றும் ஆத்துமேட்டில் இந்து தமிழர் கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மனோஜ் தலைமை தாங்கி பேசினார். மாநில அமைப்பு செயலாளர் பொன்ராஜா, திண்டுக்கல் மாவட்ட தலைவர் மணிகண்டபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். விழாவில் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.150ஐ அப்பாவி மக்களிடம் பண வசூல் செய்யும் தனியார் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் நிதிநிலை சீராக இல்லை என்று காரணம் சொல்லி விட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி பயன்படுத்திய பேனா நினைவு சின்னத்தை சுமார் ரூ.80 கோடி செலவில் சிலை வைக்க இருப்பதை கண்டிக்கிறோம். கர்நாடக அரசு காசி யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. அதுபோல ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கு கம்பு, கேழ்வரகு, அரிசி போன்ற தானியங்களை தமிழக அரசு இலவசமாக வழங்கவேண்டும். மக்களை கடுமையாக பாதிக்கின்ற மின்சார கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் வேடசந்தூர் நகர தலைவர் ராஜா, எரியோடு நகர தலைவர் முனிவிக்னேஸ்வரன், இளைஞர் அணி பொறுப்பாளர் அஜய் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com