பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த்மான் சென்னை வருகை

இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளது என்று பகவந்த் மான் கூறினார்.
பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த்மான் சென்னை வருகை
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி தொடங்கிவைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெருத்த வரவேற்றைப் பெற்றது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.இதற்காக பகவந்த் மான் இன்று தமிழகம் வந்தார். அவரை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று வரவேற்றார். பஞ்சாப் முதல் மந்திரி செய்தியாளர்களிடம் பேசியதாவது; தமிழகத்திற்கும், பஞ்சாப்பிற்கும் இடையே நீண்டகால நல்லுறவு இருக்கிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளது.தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று இங்கு வந்ததும், காலை உணவுத் திட்டம் விரிவாக்க விழாவில் கலந்து கொள்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com