பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்வி - அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மழுப்பல் பதில்

வரும் தேர்தலில் அதிமுக, திமுக ஒரே கூட்டணியில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்வி
அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்
Published on

மதுரை,

பிரதமர் விஜய் என்பது ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் மட்டுமே.. பிரதமர் வேட்பாளர் பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறுகையில்,

பிரதமர் வேட்பாளர் பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. இது குறித்து யாரும் பேசவே இல்லை. பத்திரிகையாளர்கள் தான் இதுபற்றி மாற்றி மாற்றி கேள்வி எழுப்பி வருகிறீர்கள்.

தவெக - காங்கிரஸ் இடையே எந்த முரண்பாடும் கிடையாது. பிரதமர் விஜய் என்பது ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் மட்டுமே. நமது அரசு மக்களுக்கான அரசு. எப்பொழுது மக்களுக்கு சென்ன செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் சரியாக செய்வோம்.

நாளை மறுநாள் முதல்-அமைச்சர் பதிலுரைக்கு பிறகு 2 மானிய கோரிக்கை நடக்கும். ஒவ்வொரு நாளும் சட்டசபை 7 மணி நேரம், 8 மணி நேரம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சட்டசபையில் அனைவருக்கும் பேச சரி சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

கோவில் விஷயத்தில் எங்களுடைய தலையீடு இல்லை. முந்தைய அரசு செய்த எந்த தவறையும் நாங்கள் செய்ய மாட்டோம். தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஊழல்வாதிகளுக்கு தான் பாதுகாப்பு இல்லை.

முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது. சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிப்பார்கள்.

வரும் தேர்தலில் அதிமுக, திமுக ஒரே கூட்டணியில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. யார் யாருடன் சேர்ந்தாலும் எங்கள் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்றார்.

மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com