சிறுமி உள்பட 9 பேரை கடித்து குதறிய வெறிநாய்.. பீதியில் பொதுமக்கள்

நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் விரட்டிச் சென்று கடிக்கின்றன.
Image credits: AI
Image credits: AI
Published on

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை புளியமரத்து தெரு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை அவ்வப்போது விரட்டிச் சென்று கடிக்கின்றன.

இதில் பலரும் காயமடையும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. நேற்று காலையில் அந்த பகுதியில் வெறிநாய் ஒன்று சாலையில் சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை விரட்டிச்சென்று கடித்தது. அதன்பிறகு நாயின் கவனம் அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களின் மீது திரும்பியது. சாலையில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, மாரி (45), பேச்சியம்மாள் (25), கவிதா (17) ஆகியோரை விரட்டிச்சென்று கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே அதே நாய் தென்திருப்பேரையை சேர்ந்த பால்சாமி, சுந்தரி உள்ளிட்ட 3 பேரையும் கடித்தது.

படுகாயமடைந்த 3 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர அதே பகுதியில் வெறிநாயால் கடிபட்ட மேலும் 2 பேர் அங்கு சென்று சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com