மருத்துவ சிகிச்சைக்காக ராஜாத்தி அம்மாள் இன்று ஜெர்மனி பயணம் - கனிமொழி எம்.பி.யும் உடன் செல்கிறார்

மருத்துவ சிகிச்சைக்காக கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் இன்று ஜெர்மனி செல்கிறார்.
மருத்துவ சிகிச்சைக்காக ராஜாத்தி அம்மாள் இன்று ஜெர்மனி பயணம் - கனிமொழி எம்.பி.யும் உடன் செல்கிறார்
Published on

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள். இவர் சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்தில் தனது மகள் கனிமொழி எம்.பி. உடன் வசித்து வருகிறார். ராஜாத்தி அம்மாளுக்கு, வயோதிகம் காரணமாக அவ்வப்போது உடல்நல குறைவு ஏற்பட்டது.

சரியாக உணவு உட்கொள்ள முடியாத அளவுக்கு அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி ஆகியவையும் இருந்தது. இதையடுத்து சென்னையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அஜீரண கோளாறு தொடர்ந்து, அவருக்கு தொல்லை கொடுத்து வந்தது.

இந்தநிலையில், ஜெர்மனி நாட்டில் உள்ள போன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு அவருக்கு டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து, சிகிச்சை பெறுவதற்காக ராஜாத்தி அம்மாள் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு 1.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஜெர்மனி புறப்பட்டுச் செல்கிறார்.

அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள கனிமொழி மற்றும் அவருடைய மகன் ஆதித்யன் ஆகியோரும் செல்கின்றனர். ராஜாத்தி அம்மாள் ஜெர்மனியில் 20 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com