

சென்னை,
மத்திய அரசின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும், நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜேஷ் லக்கானி, மீண்டும் தமிழக அரசு பணிக்கு மாற்றம் செய்து, மத்திய பணியாளர் நலத்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஐ.ஏ.எஸ். (பணியிட ஒதுக்கீடு) விதிகள், 1954-இன் விதி 4(2)-இன் கீழ், 'கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், நில நிர்வாகம்' என்ற தற்காலிகப் பணியிடத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இப்பணியிடம், பணியில் சேரும் நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்கோ அல்லது இப்பணியிடத்தின் தேவை முடிவுக்கு வரும் வரையோ - இவ்விரண்டில் எது முந்தையதோ - அதுவரை செயல்பாட்டில் இருக்கும்.
2. பின்வரும் பணி நியமனம் அறிவிக்கப்படுகிறது:-
மத்திய அரசுப் பணி deputation-லிருந்து திரும்பும் ராஜேஷ் லக்கானி, ஐ.ஏ.எஸ், ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆர்.கஜலட்சுமி, ஐ.ஏ.எஸ்-க்கு பதிலாக, மேலே பத்தி 1-இல் உருவாக்கப்பட்ட 'கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், நில நிர்வாகம்' என்ற பணியிடத்தில் நியமிக்கப்படுகிறார்.
3. ஐ.ஏ.எஸ். (ஊதியம்) விதிகள், 2016-இன் விதி 12(1)-இன் கீழ், மேலே பத்தி 1-இல் உருவாக்கப்பட்ட 'கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், நில நிர்வாகம்' என்ற பணியிடமானது, ஐ.ஏ.எஸ். (ஊதியம்) விதிகள், 2016-இன் அட்டவணை II-A-இல் குறிப்பிடப்பட்டுள்ள 'தலைமைச் செயலாளர்' (Chief Secretary) என்ற பணியிடத்திற்கு இணையான அந்தஸ்து மற்றும் பொறுப்புகளைக் கொண்டதாக இருக்கும் என்று அரசு அறிவிக்கிறது.
(கவர்னரின் ஆணையின்படி)
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜேஷ் லக்கானி, கடந்த பிப்ரவரியில், தமிழக அரசு பணியில் இருந்து, மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.