

சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறக்கும் வரை தமிழக அரசின் தலைமை செயலாளராக ராமமோகனராவ் இருந்தார்.
இதனால், ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல்நிலை பாதிப்புகள் இருந்தது?, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்ன நிலையில் இருந்தார்?, அவருக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன? என்பது போன்ற அனைத்து விவரங்களும் தெரியும் என்பதால் அதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை நீதிபதி அவரிடம் கேட்டார். நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
மேலும் அவர், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் பார்த்ததாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் தனக்கு தெரியும் என்றும் கூறி உள்ளார். மதியம் 2 மணி வரை சுமார் 3 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.
விசாரணை முடிந்து வெளியில் வந்த ராமமோகனராவ் நிருபர்களிடம் கூறும்போது, ஆணையத்தில் அளித்த வாக்குமூலத்தை வெளியில் சொல்லக்கூடாது. நீதிபதி என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டார். அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளித்துள்ளேன். காவிரி பிரச்சினை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா தலைமையில் கூட்டம் நடந்தது குறித்து நீதிபதி கேட்ட கேள்விக்கும் பதில் அளித்தேன். ஜெயலலிதா மரணத்தில் நியாயம் கிடைக்கும் என்றார்.
ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக அவருக்கு திடீரென்று இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் சென்னை மருத்துவக்கல்லூரி இருதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவர் தினேஷ், அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மருத்துவர் தினேசுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அவர், இன்று (வெள்ளிக்கிழமை) ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.