'அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை' - வழக்கறிஞர் பாலு


அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை - வழக்கறிஞர் பாலு
x
தினத்தந்தி 11 Sept 2025 1:00 PM IST (Updated: 11 Sept 2025 4:11 PM IST)
t-max-icont-min-icon

பா.ம.க.வின் தலைவராக அன்புமணியே தொடர்கிறார் என பாலு தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையேயான கருத்து மோதல் நீடித்து வருகிறது. கடந்த மாதம் 17-ந் தேதி ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு அவர் 31-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.

தொடர்ந்து கடந்த 4-ந்தேதி தைலாபுரத்தில் பா.ம.க. மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் வருகிற 10-ந்தேதிக்குள்(அதாவது நேற்று) உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றால், அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், “அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க காலக்கெடு வழங்கப்பட்டது. இருப்பினும் 16 குற்றச்சாட்டுகள் குறித்து பதில் கூறாததால், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானது, சரியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

இதனால் பா.ம.க. செயல்தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பா.ம.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை என அன்புமணி ராமதாஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ம.க. செய்தித்தொடர்பாளர் பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

“அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை. கட்சி விதிகளின்படி அன்புமணியே பா.ம.க.வின் தலைவர். தேர்தல் ஆணையத்தின் முடிவுகளின்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணிதான் பா.ம.க.வின் தலைவராக தொடர்கிறார். தலைவர், பொருளாளர், செயலாளர் பதவியில் எந்த குழப்பமும் இல்லை.

பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளோம். அன்புமணி தரப்பு நிர்வாகிகளையே தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சி விதிகளின்படியும், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தின்படியும் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு செல்லத்தக்கது அல்ல. ராமதாஸ் உத்தரவுகள் பா.ம.க.வை கட்டுப்படுத்தாது.

பா.ம.க. தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்கிறார்கள். அன்புமணியை நீக்கியது செல்லாது. பா.ம.க. நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தலைவருக்கே அதிகாரம் உள்ளது. நிர்வாகப் பணிகளில் தலையிட நிறுவனருக்கு அதிகாரம் இல்லை.

பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் என்ற முறையில் இதனை சொல்கிறேன். அன்புமணி உளவு பார்த்தார் என்று சொல்வது தவறு. உளவு பார்க்கும் பழக்கம் அன்புமணிக்கு கிடையாது. உளவு பார்த்திருந்தால் இப்படி ஒரு சூழல் எழுந்திருக்காது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story