

தென்காசி,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள ராமநதி அணை (84 அடி உயரம்), அகஸ்தியமலை உயிர்க்கோள காப்பகத்திலிருந்து உருவாகும் ராமநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 1974-ல் திறக்கப்பட்ட இந்த அணை, ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கிறது.
ராமநதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளின் மூலம் கடையம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. தற்போது, கோடை வெயில் கொளுத்தி வருவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து, போதிய நீர்வரத்தின்றி அணை வறண்டு காணப்படுகிறது. இதனால் ராமநதி அணையை நம்பியிருக்கும் சுற்று வட்டார கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் வருவதற்கு முன்பே அணை வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.