ராமநாதபுரம்: கலெக்டரிடம் மனு அளித்தவர் மீது வழக்குப்பதிவு

இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுடன் கலெக்டரிடம் மனு அளித்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மனு அளிக்க வந்த மாணவர்கள்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுடன் கலெக்டரிடம் மனு அளித்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மனு அளிக்க முடிவு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே திருச்சிலுவைபுரம் உள்ளது. அங்கு பள்ளி செல்லும் நேரத்தில், போதிய அரசுப் பேருந்து வசதி இல்லை. எனவே, கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நீண்ட நாட்களாகப் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து தங்களின் கிராமத்திற்குப் பேருந்து இயக்கக் கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க பொதுமக்கள் முடிவு செய்தனர்.

கலெக்டரிடம் மனு அளிப்பு

இதன்படி, கமுதி அருகே உள்ள திருச்சிலுவைபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர், பள்ளிச் சீருடையில் இருந்த மாணவ, மாணவிகளைத் திரட்டிக் கொண்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் ஊருக்கு முறையான பேருந்து வசதி இல்லை என்றும், இதனால் கமுதியில் உள்ள பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் தினமும் ஆட்டோக்களுக்கு மாதம் ரூ.1,000 வரை செலவிட வேண்டியுள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

மனு அளித்தவர் மீது வழக்குப்பதிவு

பொதுமக்களின் கோரிக்கையைக் கேட்டறிந்த மாவட்ட கலெக்டர், சில நாட்களில் பேருந்து வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தார். இருப்பினும், பள்ளி வேலைநாளில் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல், சீருடையுடன் மனு அளிக்க அழைத்து வந்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, பள்ளி நேரத்தில் மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பாமல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்த குற்றச்சாட்டின் கீழ், மனு அளிக்க ஏற்பாடு செய்த ஸ்டீபன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com