ராமநாதபுரம் அருகே போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 9 பேர் கைது

பறிமுதல் செய்த 1.4 கிலோ மெத்தம்பெட்டமைன் மதிப்பு ரூ 2 கோடி இருக்கலாம் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
போதைப்பொருள் தொழிற்சாலை,9 பேர் கைது
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முறியடித்தது.

9 பேர் கைது

இச்சோதனையில் 1 கிலோ 400 கிராம் மெத்தம்பெட்டமைன், அதை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 1.9 கிலோ சூடோஎபிட்ரின், 5 கிலோ சிவப்பு பாஸ்பரஸ், 4.8 கிலோ அயோடின் உள்ளிட்ட மூலப்பொருட்கள், பிற அமிலங்கள், வினையூக்கிகள், தின்னர்கள், மெத்தம்பெட்டமைன் தயாரிப்பு ஆய்வகம், ஆய்வக உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இக்குற்ற செயல்களில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளிகள் 9 பேர் கைது செய்யப்பட்னர்.

ரகசிய தகவல்

ஜூலை 27 மாலை 5 மணியளவில் போலீஸாருக்கு கிடைத்த தகவல் படி ராமநாதபுரம் மாவட்ட காவல் போதைப் பொருள் தடுப்பு குழு, ராமநாதபுரம் நகராட்சி வாட்டர் டேங்க் அருகே சோதனை மேற்கொண்டனர்.

8 கிராம் மெத்தம்பெட்டமைனை

ராமநாதபுரத்தில் பணிபுரியும் மார்த்தாண்டம், செட்டிச்சார்விளையைச் சேர்ந்த ஜெபிஷ் (25) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்தனர். இவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இப் போதைப்பொருளை முஹமது உமருல் ஜமீன் (22), முஹமது அஸ்லம் (22) ஆகியோரிடமிருந்து ஐபீஷ் வாங்கியது தெரியவந்தது. இக்கும்பல் குறித்த தொடர் விசாரணையில் ராமநாதபுரம் அருகே காரிக்கூட்டம் பள்ளிவாசல் தெரு முஹமது உமருள் ஜமீன் 22, முஹமது அஸ்லம் 22 ஆகியோரது வீட்டைச் சோதனை செய்து, இருவரையும் கைது செய்து 8 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர்.

விசாரணை

இருவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, காதர் பிச்சை தெரு ஷேக் முஹமது (38) என்பவர் இப்போதைப்பொருளை விநியோகம் செய்தது தெரியவந்தது. ஷேக் முஹமது இருப்பிடத்தை உறுதி செய்த தனிப்படையினர் அவரிடமிருந்து 120 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர். இப் போதைப்பொருள் இளையான்குடி ஹபிபுல் ரஹ்மான் (52) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது என ஷேக் முஹமது கூறினார்.

முக்கிய குற்றவாளி

இதையடுத்து , தனிப்படையினர் ஹபிபுல் ரஹ்மான், இளையான்குடி சிக்கந்தர் பாதுஷா (53), ஜமால் மொய்தீன் (60) ஆகியோரை கைது செய்து, இவர்களிடமிருந்து முறையே 300 கிராம், 100 கிராம், 180 கிராம் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் நடத்திய தீவிர விசாரணையில், இக்கடத்தல் கும்பலுக்கு சென்னையில் தோல்பொருள் தொழில் செய்து வரும் இளையான்குடி ஷாகுல் ஹமீது (50) முக்கிய குற்றவாளி என தெரியவந்தது.

இரும்பு கடைசல் பட்டறை

போதைப்பொருள் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்து, இளையான்குடி ஜாஹிர் உசேனுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜாஹிர் உசேன் (56) உள்பட 3 பேர் சேர்ந்து, ஜாஹிர் உசேனுக்குச் சொந்தமான இரும்பு கடைசல் பட்டறையில் மறைத்து வைத்த மெத்தம்பெட்டமைன் தயாரிப்பு ஆய்வகத்தில் இப் போதைப்பொருளைத் தயாரித்து வந்தனர்.

சோதனை

இத் தகவல் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படையினர் அந்த வளாகத்தில் சோதனை நடத்தி, 670 கிராம் மெத்தம்பெட்டமைன், தயாரிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்படும் 1.9 கிலோசூடோஎபிட்ரின், 5 கிலோ சிவப்பு பாஸ்பரஸ், 4.8 கிலோ அயோடின் ஆகிய மூலப்பொருட்கள், பிற அமிலங்கள், வினையூக்கிகள், தின்னர்கள், ஆய்வக உபகரணங்களைக் கைப்பற்றினர்.

பாராட்டு

போலீஸார் சோதனையில் 1 கிலோ 370 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்து இக்குற்ற பின்னணி முற்றிலும் ஆராய்நது மேலும் இருவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்த 1.4 கிலோ மெத்தம்பெட்டமைன் மதிப்பு ரூ 2 கோடி இருக்கலாம் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. துரிதமாக செயல்பட்டு போதைப் பொருள் கும்பலை பிடித்த தனிப்படையினரை ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் பாராட்டினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com