

ராமேஸ்வரம்,
ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச்சென்றனர். இந்நிலையில் தலைமன்னார், தனுஷ்கோடி எல்லை பகுதிகள் மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 5 விசை படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்ததாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து அந்த படகுகளில் இருந்த 27 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் மற்றும் 5 விசை படகுகளை விடுவிக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ம் தேதி அன்று பாம்பன் பாலத்தை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.