ராமேஸ்வரம்: தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா: வீடியோ எடுத்த 2 பேர் கைது

தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம்: தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா: வீடியோ எடுத்த 2 பேர் கைது
Published on

ராமேஸ்வரம்,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் இருந்து நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர், ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர், கடற்கரை எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் துணி மாற்றுவதற்காக கட்டணம் எடுத்துள்ளனர்.

அப்போது, அறைக்குள் ரகசிய கேமரா இருந்ததை, இளம்பெண் ஒருவர் கண்டுபிடித்து தனது தந்தையிடம் கூறினார். இதுகுறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து ராமேஸ்வரம் கோவில் போலீசார் வழக்கு பதிந்து, அங்கு வேலை செய்த ஊழியர்களான ராமேஸ்வரம் தம்பியான்கொல்லையை சேர்ந்த ராஜேஷ் கண்ணன்( 34) ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த மீரான் மைதீன்( 38) ஆகியோரை கைது செய்தனர்.

அங்குள்ள உடை மாற்றும் அறையில் பல மாதங்களாக ரகசிய கேமரா வைத்து, பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து, இவர்கள் இருவரும் மொபைல் போனில் பார்த்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரிக்க துவங்கி உள்ளனர்.

நிறைய பெண்களை இவர்கள் படம் பிடித்து உள்ளதால் அதுதொடர்பான வீடியோக்களை வைத்து யாரையும் மிரட்டினார்களா அல்லது வலைத்தளங்களிலோ, வேறு யாருக்கும் பகிர்ந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து பெண்களை படம் பிடித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com