

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் துணைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. மற்றும் எம்.டெக். படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை மட்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். துணைவேந்தர் சுரப்பா ஆணைப்படி வெளியிடப்பட்டுள்ள, வீண் குழப்பங்களை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
சுரப்பாவின் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித்தரமும் சீரழிந்து வருகிறது. தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில், சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் கடந்த ஆண்டு 4-வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம் நடப்பாண்டில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கும், ஓட்டுமொத்த தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்து 14-வது இடத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகம் சரிந்திருக்கிறது. பல்கலைக்கழகத்தை முன்னேற்றுவதற்கு பதிலாக சீரழிப்பதையும், அரசுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு மாணவர்கள் நலனை சீர்குலைப்பதையும் அரசும், கவர்னரும் சகித்துக்கொள்ளக்கூடாது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து சுரப்பாவை நீக்கிவிட்டு, சிறந்த கல்வியாளர் ஒருவரை அப்பதவியில் கவர்னர் அமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.