

சென்னை,
வானில் எவ்வளவோ அற்புத நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றில் பல நம்கண்களுக்கு தெரிவதில்லை. சிலவற்றை தொலைநோக்கியின் மூலம் பார்க்க முடியும். சிலவற்றை வெறும் கண்ணால் கூட பார்க்க முடியும். அப்படி வெறும் கண்களால் பார்த்து ரசித்து மகிழ்வதற்கு ஓர் அற்புத வான்நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.
அதாவது, பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தை ஒட்டியே கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கோளுக்கும் இடைப்பட்ட தூரம் மாறுபடும். அவ்வாறு தத்தமது பாதைகளில் கோள்கள் பயணித்து கொண்டிருக்கும்போது பூமிக்கு அருகில் உள்ள கோள் தொலைவில் உள்ள கோளை முந்தி செல்வது போல் இருக்கும்.
அந்த நேரத்தில் அந்த இரு கோள்களும் அருகருகே இருப்பது போல் தெரியும். இன்று மாலையில் வெள்ளி கோளும், மிகத் தொலைவில் இருக்கும் செவ்வாய் கோளும் அருகருகே இருப்பது போல் தெரியும். அப்போது அவற்றிற்கு இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரியை விட குறைவாக இருக்கும்.
இன்றைய தினம் மாலையில் சூரியன் மறைந்த பிறகு வீடுகளின் மொட்டை மாடியில் நின்று கொண்டு மேற்கு திசையை உற்று நோக்கினால் அங்கு ஒளி பொருந்திய வெள்ளிக்கோள் தெரியும். தொலைதூரத்தில் இருக்கும் செவ்வாய் கோள் ஒளி குறைவாக வெள்ளிக் கோளுக்கு அருகிலேயே இருப்பது போல் தெரியும். இந்த அற்புத காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம்.