வேப்பனப்பள்ளி அருகேகாரில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

வேப்பனப்பள்ளி அருகேகாரில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

வேப்பனப்பள்ளி அருகே காரில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாகன தணிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ மற்றும் அதிகாரிகள் நேற்று அதிகாலை வேப்பனப்பள்ளி அருகே சிங்கிரிப்பள்ளியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 24 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அரிசி மூட்டைகளை காருடன் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலும், கிருஷ்ணகிரி அடுத்த மூங்கில்புதூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராஜசேகர் (வயது 24) என்பவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடமும் ஒப்படைத்தனர்.

அரிசி கடத்தல்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மூங்கில்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலத்துக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com