தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூல பொருட்கள் கிடைக்க ஏற்பாடு - அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்

அமெரிக்க பொருளாதார கட்டுப்பாடுகள் காரணமாக பொட்டாஷியம் குளேரைடு விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூல பொருட்கள் கிடைக்க ஏற்பாடு - அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்
Published on

சென்னை,

சட்டமன்றத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில், தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை 40 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதால், 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூலப்பொருள் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அமெரிக்க பொருளாதார கட்டுப்பாடுகள் காரணமாக பொட்டாஷியம் குளேரைடு விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் மெழுகு விலை, காகித அட்டை விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், இப்பிரச்சனையை கருத்தில் கொண்டு, சிட்கோ நிறுவனத்தின் மூலம் மெழுகை மொத்தமாக கொள்முதல் செய்து தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com