ஈரோட்டில் ரயான் துணி உற்பத்தி வேலைநிறுத்தம் இன்று முதல் தொடங்கியது

ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம் இன்று முதல் தொடங்கியது.
ஈரோட்டில் ரயான் துணி உற்பத்தி வேலைநிறுத்தம் இன்று முதல் தொடங்கியது
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்பட பல்வேறு இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை உற்பத்தியில் ஈரோட்டில் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீப காலமாக நூலின் விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல விசைத்தறியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். மேலும் இந்த வருடத்திற்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. சமீப காலமாக நூலின் விலைக்கு கூட உற்பத்தி செய்யப்பட்ட துணி விலை போகாததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

இந்தநிலையில், விசைத்தறி உரிமையாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் இன்று முதல் வரும் 10-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை நிறுத்தம் செய்வதென்று முடிவு செய்தனர். அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் ரயான் துணி உற்பத்தி நிறுத்தம் தொடங்கியது. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com