“ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்” மு.க.அழகிரி பேட்டி

“தி.மு.க.வில் என்னை இணைக்க தயார் என்றால், ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்” என்று மு.க.அழகிரி தெரிவித்தார்.
“ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்” மு.க.அழகிரி பேட்டி
Published on

மதுரை,

கருணாநிதி மறைவை தொடர்ந்து சென்னையில் வருகிற 5-ந் தேதி அமைதிப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்த மு.க.அழகிரி, மதுரையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். நேற்று 7-வது நாளாக அவரது வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ள அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள். எங்களுக்கு ஆளுங்கட்சி தரப்பில் எந்த நெருக்கடியும் தரவில்லை.

தலைவராக ஏற்க தயார்

தி.மு.க.வுடன் இணைவதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. தி.மு.க.வில் எங்களை இணைக்க தயார் என்றால், மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள நாங்களும் தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளை சேர்ந்த பலர் நேற்று அழகிரியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

பதவி மீது ஆசை இல்லை

இதுபற்றி அழகிரி கூறும்போது, உண்மையானவர்கள் என் பக்கம் வருவார்கள் என்று தலைவர் கலைஞர் நினைவிடத்தில் கூறினேன். அது தான் என்பக்கம் வந்து இணைந்துள்ளனர். கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயார். எனக்கும், என் மகனுக்கும் பதவியின் மீது ஆசை இல்லை என்று அன்றே என் மகன் கூறிவிட்டான். தி.மு.க.வுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவும், கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதில் சேர நினைக்கிறோம் என்றார்.

இதற்கிடையே தி.மு.க.வில் உங்களை இணைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, வருகிற 5-ந் தேதி நடைபெறும் அமைதி பேரணிக்கு பிறகு எனது அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிப்பேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com